சென்னை: டெலிகாம் துறை கட்டுப்பாட்டு ஆணையமான TRAI மற்றும் மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாக, இந்தியாவில் இருக்கும் டெலிகாம் சேவை நிறுவனங்கள் நாட்டின் சில பகுதிகளில் மட்டும் போன் கால் வரும்போதே அழைப்பவரின் பெயரை காட்டும் Caller ID சேவையைச் சோதனை முறையில் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை மற்றும் ஹரியானாவில் டெலிகாம் சேவை நிறுவனங்கள் சிறிய அளவிலான பகுதிகளில் மட்டும் இந்த சோதனையைச் செய்து வருகின்றன. வரும் வாரங்களில் இந்த சோதனை முறை நாட்டின் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Jio Airtel Trai Telecom
கிட்டத்தட்ட Truecaller செய்யும் பணியை, இனி இந்த ஆப் இல்லாமலேயே டெலிகாம் சேவை நிறுவனங்கள் உதவியுடன் நம்மை யார் அழைத்தாலும் அவரின் பெயரை காட்டும் Caller ID சேவையை அளிக்கிறது. ஒவ்வொரு மொபைல் எண்ணும் ஆதார் உடன் இணைக்கப்பட்டு உள்ள காரணத்தாலும், 100-க்கு 85 மொபைல் எண்கள் தத்தம் டெலிகாம் நிறுவனத்தின் ஆப் மூலம் இணைக்கப்பட்டு உள்ளதால் இதை எளிதாக செய்ய முடியும்.
TRAI மற்றும் மத்திய அரசு இந்த Caller ID சேவையை வேகமாகக் கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பது Truecaller ஆப்-க்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TRAI மற்றும் மத்திய அரசு இச்சேவையைக் கொண்டு வர முக்கியமான காரணம், இந்தியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில், அழைப்பவர் பெயர் தோன்றும் சேவை (CNAP - Calling Name Presentation) முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறது.
இந்த CNAP சேவையின் சோதனைக்குப் பின்பு டிராய் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. இக்கூட்டத்தில் இச்சோதனையின் பல காரணிகளின் ஆய்வு முடிவுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என டெலிகாம் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் CNAP சேவையைக் கிடைப்பதை, உறுதி செய்வதற்கான உரிய உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று TRAI ஏற்கனவே குறிப்பிட்ட நிலையில், இந்த சோதனை முடிந்த பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில், தொழில்நுட்ப சவால்களைக் காரணம் காட்டி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
முகேஷ் அம்பானியின் Reliance Jio நிறுவனம் CNAP சேவை குறித்துக் கூறுகையில் "இது கட்டாய சேவையாக இருக்கக்கூடாது. சிக்னல்களில் இது சுமையை அதிகரிக்கும். மேலும் தாமதம் மற்றும் இணைப்பு தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல தொழில்நுட்ப சிக்கல்கள் உருவாகக் கூடும்" என்று கூறியுள்ளது.
இதேபோல் CNAP சேவையில் "தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான சவால்கள்" இருப்பதாக Airtel நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், CNAP சேவைக்காகத் தனது தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு உரிமைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
More From GoodReturns
எலான் மஸ்க்-கிற்கு டேக்கா கொடுத்த முகேஷ் அம்பானி.. சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவைக்கு ஒப்புதல்..!!
0 Comments