டெல்லி: மத்திய அரசு பிரதமர் வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி பெற முடியும்.
2024 - 25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் அதாவது பிரதமர் வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார்.
இதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி இளைஞர்களுக்கு நாட்டின் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் சோதனை ஓட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் சுமார் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய ஆன்லைன் தளத்தின் மூலம் இந்த வேலை வாய்ப்பு பயிற்சி திட்டமானது நிர்வகிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்ற இளம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்.
இதன் மூலம் ஒரு நிறுவனம் எப்படி இயங்குகிறது, ஒரு தொழில் எப்படி உருவாகி செயல்படுகிறது என்பன உள்ளிட்ட திறன்களை அவர்கள் பெறுவார்கள். அதாவது படிப்பிற்கும் வேலைக்கும் இடையில் இருக்கும் திறன் சார்ந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் இருக்கும் என தெரிகிறது. தற்போதைக்கு மகேந்திரா & மகேந்திரா, மேக்ஸ் லைஃப் , அலம்பிக் பார்மா உள்ளிட்ட 1877 நிறுவனங்கள் பிரதமரின் வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்குவதற்காக ஆர்வம் காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
எப்படி விண்ணப்பம் செய்வது?: இதில் இணைந்து பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் அக்டோபர் 12 முதல் 25ஆம் தேதிக்குள் மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான அமைச்சகத்தின் குறிப்பிட்ட இந்த pminternship.mca.gov.in இணையதளத்தில் சென்று விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களை தேர்வு செய்யும் பணி அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி முடிவடைகிறது. இதனை அடுத்து தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் நவம்பர் 8 முதல் 15ஆம் தேதிக்குள் இன்டர்ன்ஷிப் ஆஃபர் லெட்டர்கள் வழங்கப்படும்.
முதல் பேட்ஜ் இன்டர்ன்கள் தங்களுடைய ஓராண்டு கால வேலை வாய்ப்பு பயிற்சியினை டிசம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்குவார்கள். இந்த வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் கடந்த மூன்று ஆண்டுகளில் அவை மேற்கொண்ட சிஎஸ்ஆர் நடவடிக்கைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: இவ்வாறு வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு மாதம்தோறும் 5,000 ரூபாயை அரசு நிதி உதவியாக வழங்குகிறது.
இதில் 4500 ரூபாயை மத்திய அரசும், 500 ரூபாயை வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் வழங்குகின்றன. அதுமட்டுமின்றி இந்த இன்டர்ன்ஷிப்பில் சேர்பவர்களுக்கு பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதம சுரக்ஷா பீமா யோஜனா திட்டங்களின் கீழ் காப்பீடும் கிடைக்கும்.
பிரதமரின் இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தில் சேர விரும்புபவர்கள் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ITI diploma, அல்லது BA, BSc, BCom, BCA, BBA பயின்றதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிறுவனங்களில் வேலை செய்து வருபவர்களுக்கு அல்லது முழு நேரமாக மேற்படிப்பை தொடர்பவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தில் இணையும் வாய்ப்பு கிடைக்காது அதேபோல நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு இதில் வாய்ப்பு கிடைக்காது. சந்தேகங்களுக்கு 1800-116-090 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments