டெல்லி: மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தன்னுடைய தனியார் மயமாக்கல் கொள்கையை தொடரும் என தகவல் வெளியகையுள்ளது. பல்வேறு சமூக நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், முறையான வருமானத்திற்கும் பல்வேறு பொதுத்துறை பங்குகளையும் சொத்துக்களையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனியாருக்கு விற்பனை செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2021-22-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்க இருப்பதாக அறிவித்தார். வரக்கூடிய பட்ஜெட்டில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. மத்திய அரசு ஏற்கனவே பல பொதுத்துறை வங்கிகளை நிதி ரீதியாக வலுப்படுத்தும் பொருட்டு ஒன்றாக இணைத்துள்ளது. இந்தியாவில் தற்போது 12 பொதுத்துறை வங்கிகள் செயல்படுகின்றன. இந்திய வங்கி பரிமாற்றங்களில் இவை 60% பங்காற்றுகின்றன.
இதனிடையே 2025ஆம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் தனது பங்குகளை விற்பதன் மூலம் 50,000 கோடி திரட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் வளர்ச்சி பாதையில் இருக்கின்றன. அவற்றின் நிதி நிலைமையும் சிறப்பாக இருக்கிறது.இந்த நிறுவனங்களில் அரசு தங்களுடைய பங்குகளை விற்று பணமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக கருதுகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவின் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் லாபகரமானவையாக செயல்பட்டு வருகின்றன.
எனவே சில வங்கிகளை மட்டுமே தன்வசம் வைத்துக்கொண்டு மீதம் இருக்கும் வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவில் அரசு இருப்பதாக Grant Thornton Bharat நிறுவனத்தின் தலைவரான விவேக் ஐயர் தெரிவிக்கிறார். எனவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என சொல்லப்படுகிறது. தற்போது வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. அந்த வரியை நீக்க வேண்டும் என மக்கள் தரப்பிலும் வங்கிகள் தரப்பிலும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது . இதனால் மக்கள் மீண்டும் வங்கிகளில் தங்களது பணங்களை டெபாசிட் செய்வதற்கு முன் வருவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடத்தி வரக்கூடிய 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களை லாபகரமாக மாற்ற மறுசீரமைக்க இருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது.
பட்ஜெட்டில் இதுபற்றி விரிவாக அறிவிக்கப்பட கூடும் என சொல்லப்படுகிறது. இதன்படி அரசுக்கு சொந்தமான ஆனால் பயன்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய நிலங்களை விற்பனை செய்வது மேலும் சொத்துக்களை விற்று பணமாக்குவது உள்ளிட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட வாய்ப்புள்ளது.
0 Comments