திருவள்ளூர்: ஆதார் கார்டுடன், செல்போன் எண்ணை இணைக்காவிட்டால் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என தகவல்கள் பரவியதால், இ-சேவை மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முதியோர் உதவி தொகை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. மக்களிடையே பீதியை கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பும் மக்கள் இசேவை மையங்களில் குவிந்துவிடுகிறார்கள். இது தமிழகத்தில் அவ்வப்போது நடக்கிறது.
Aadhar old age pension
அண்மையில் ரேஷன் கடையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகை வைக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அரிசி போடமாட்டார்கள் என்று வதந்தி பரவியது. இந்த வதந்தி தமிழகத்தில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கடைசியில் தமிழக அரசே முதல் பக்க செய்தியாக வதந்தி என்பதை புரிய வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்படித்தான் தற்போது ஆதார் கார்டுடன், செல்போன் எண்ணை இணைக்காவிட்டால் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியது. இதனால் கலங்கி போன முதியோர்கள், உடனே திருத்தணி பகுதி இசேவை மையங்களில் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான முதியோர்கள் குவிந்த காரணத்தால் அதிகாரிகள் ஆடிப்போனார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் 74 வருவாய் கிராமங்கள் இருக்கிறது. திருத்தணி தாலுகாவில், 18 ஆயிரத்து 200 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை மாத, மாதம் வழங்கப்படுகிறது. சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம் மூலம் ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதந்தோறும், ரூ.1,200 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த எண்ணிக்கை பல லட்சமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம், முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகள் விவரம் மற்றும் உதவித் தொகை சரியான முறையில் சேருகிறதா என அறிய விரும்பிய அரசு, பயனாளிகளின் ஆதார் கார்டில் உள்ள செல்போனை தொடர்பு கொண்டது. ஆனால் பெரும்பாலான தொலைப்பேசி எண்கள் தவறாக இருந்தது. இதையடுத்து, சரியான செல்போன் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், அதற்கு குறிப்பிட்ட காலக்கெடு கிடையாது. ஆகையால் இந்த ஆண்டு முழுவதும் பயனாளிகள் தங்களின் உண்மையான செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், சிலர் ஆதாருடன் செல்போன் எண்ணை இந்த மாதத்திற்குள் இணைக்காவிட்டால், முதியோர் உதவித் தொகை நிறுத்தப்படும் என தவறான செய்தியை சமூக வளையதளத்தில் பரப்பி விட்டனர். இதனால் முதியோர் உதவித் தொகை பெறும் முதியவர்கள் பலர், கடந்த சில நாட்களாக திருத்தணி நகராட்சி அலுவலகம், மற்றும் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையங்களில் தினமும் ஆதார் கார்டுடன் செல்போன் எண் இணைப்பதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வருவாய் துறை அதிகாரிகள், 'ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் இம்மாதத்திற்குள் இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். எனினும் வதந்தியால் ஏற்பட்ட அச்சம் காரணமாக செல்போன் எண்ணை, ஆதாருடன் இணைப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
0 Comments