சென்னை: வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டும் என நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். தனியார் நிதி ஆலோசனை மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனமான deVere குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான நிகெல் கிரீன் வரும் புத்தாண்டின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை சர்வதேச அளவில் உச்சத்தை எட்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு அவர் மூன்று காரணங்களை முன் வைக்கிறார்.
இந்த மூன்று காரணிகளும் சர்வதேச பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் இவை தங்கத்தின் விலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என தெரிவித்துள்ளார்.
அதிக அளவில் தங்கம் வாங்கும் மத்திய வங்கிகள்: பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பது தெரியவந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான சண்டை தொடங்கியது முதலே பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களின் தங்க இருப்பை அதிகரிக்க தொடங்கி விட்டன.
2022 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட தற்போது மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கும் போக்கு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என அவர் கூறுகிறார். இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொள்ளலாம் என்ற அச்சத்தில் இருக்கும் நாடுகள் தங்களிடம் இருக்கும் டாலர் இருப்புகளை கைவிட்டு அவற்றை தங்கமாக மாற்றி வருகின்றன என அவர் தெரிவிக்கிறார். சீனாவை பொறுத்தவரை கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் தொடர்ந்து 10 மாதங்களாக அதன் மத்திய வங்கி அதிகளவிலான தங்கத்தை வாங்கி இருப்பு வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டிலும் இந்த போக்கு தொடர்ந்தது என கூறும் அவர் சீனா 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 290 டன்கள் தங்கத்தை வாங்கி கையிருப்பு வைத்துள்ளது என தெரிவிக்கிறார். அதேபோல துருக்கி, சிங்கப்பூர், பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளும் தங்களின் தங்க இருப்பை அதிகப்படுத்தி வருவதாக கூறுகிறார்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு:
தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை உயர்த்தி வந்த அமெரிக்க மத்திய வங்கி அண்மையில் திடீரென வட்டி விகிதத்தை குறைத்தது. அதிக வட்டி விகிதம் இருக்கும்போது தங்கத்தின் மீது யாரும் கவனம் செலுத்தவில்லை, ஆனால் தற்போது வட்டி விகிதத்தை குறைத்து இருப்பதால் அனைவரும் தங்கத்தை சிறந்த முதலீடாகவும் நல்ல வருமானம் தரக்கூடிய முதலீடாகவும் கருதி அதன் பக்கம் கவனம் செலுத்துகின்றனர்.
நாடுகளுக்கு இடையிலான மோதல்:
குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையிலான தாக்குதல்கள் , பொருளாதார தடைகள் மற்றும் மறைமுகமான வர்த்தக சண்டைகள் ஆகிய மூன்றும் சர்வதேச பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் ஏற்ற இறக்கங்களை உருவாக்கும்.
இந்த நிலையில் பாதுகாப்பான முதலீடாக பல்வேறு முதலீட்டாளர்களும் தங்கத்தையே கருதுகின்றனர். எனவே தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும் என தெரிவிக்கிறார். இஸ்ரேல் - ஈரான் இடையிலான பிரச்சினை மற்றும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான சண்டைகள் இதுவரை முடிவை எட்டவில்லை. எனவே நிச்சயமாக இவை தங்கத்தின் விலையை உயர்த்தும் காரணியாக இருக்கும் என நிகெல் கிரீன் கூறுகிறார்.
0 Comments