டெல்லி: ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை நோக்கி நகர்கின்றனர். அவர்களுக்காக 100 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று டாடா தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 5-6 லட்சம் வேலை வாய்ப்புகளை டாடா உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச அளவில் இளைஞர்கள் வளம் அதிகம் உடைய நாடுகளில் இந்தியா முதன்மையாக இருக்கிறது. இங்கு மொத்த மக்கள் தொகையில் 28% பேர் 15-29 வயது வரை உள்ளனர். இந்த எண்ணிக்கை மிகப்பெரியது. எனவே, உற்பத்தியில் சீனாவுக்கே நம்மால் சவால் விட முடியும். ஆனால், இங்குதான் வேலையின்மை மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், அடுத்த 5 ஆண்டுகளில் 5-6 லட்சம் வேலைகளை டாடா உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த 'இந்தியன் பவுன்டேசன் ஆஃப் குவாலிட் மேனேஜ்மென்ட்' (IFQM) கூட்டத்தில் அவர் இதை கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு மனித வளம்தான். ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை நோக்கி நகர்கின்றனர். அவர்களுக்காக 100 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 'விக்சித் பாரத்' திட்டம் நல்ல பொருளாதார வளர்ச்சிக்கானது அல்ல.
இருப்பினும், இதனால் சமத்துவத்தையும், அனைவருக்குமான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருளின் தரம், உலக சந்தையில் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் எனில், வேலையை உருவாக்க வேண்டும். இது இந்தியாவுக்கான தருணம். நம்மிடம் வேகம் இருக்கிறது..
நம்மால் உலக சந்தையில் உற்பத்தியை வழங்கும் முக்கிய வீரராக உருவாக முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்த கூட்டத்தில் மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றிருந்தார். அவர் பேசும்போது, மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி, எய்ம்ஸ் மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்று கூறியுள்ளார்
மேலும், "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது மிகப்பெரிய சவால். இதனை மத்திய அரசு திறம்பட எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேம்பட்டிருக்கிறது. இந்தியா தற்போது செல்போன்கள், தொலைதொடர்பு சாதனங்களின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உற்பத்திக்கான அடித்தளத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார். டாடா குழுமம் செமிகண்டக்டர்கள், மின்சார வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் தொடர்புடைய தொழில்களிலும் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments