திருத்தணி:ஆன்-லைன் மூலம் பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்கள் போதிய ஆவணங்கள், தவறான சர்வே எண் உள்ளிட்ட தகவலுடன் பதிவேற்றம் செய்வதால், அதிகளவில் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுதும் இ-- சேவை மைய ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சி எடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஒன்பது தாலுகா அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தாலுகாக்களில் மொத்தம், அரசு மற்றும் தனியார் என, 895 இ- - சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விவசாய நிலம், வீட்டுமனைகளுக்கு பட்டா கேட்டு, விண்ணப்பங்கள் இ- - சேவை மூலம் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஆனால், சில மாதங்களாக ஆன்-லைன் வாயிலாக பட்டா கோரி விண்ணப்பிக்கும் மனுக்கள், அதிகளவில் நில அளவை துறையினரால் நிராகரிக்கப்படுகிறது.
இதற்கு காரணம், இ - -சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் போது, ஆவணங்கள் முறையாக ஸ்கேன் செய்யாததால், பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது.
இதனால், பெரும்பாலான மனுக்கள் போதிய ஆவணம் இல்லை, சர்வே எண் தவறு, மொபைல்போன் எண் தவறு என, பல்வேறு காரணங்கள் கூறி நில அளவையாளர்கள் தள்ளுபடி செய்கின்றனர்.
இதை தடுக்கும் வகையில், கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் உத்தரவின்படி, மாவட்ட நில அளவை இயக்குனர், திருத்தணி, பொன்னேரி மற்றும் திருவள்ளூர் வருவாய் கோட்டங்களில் இ - -சேவை மைய உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
0 Comments