டெல்லி: சளி மற்றும் இருமல் மருந்துகள், வலி ஆயின்மெண்ட்கள் ஆகியவற்றை வாங்குவதென்றால் நாம் மருந்து கடைகளுக்கு தான் செல்ல வேண்டும். இரவு நேரங்களில் திடீரென இத்தகைய மருந்துகளை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த சிக்கல் இன்னும் அதிகம். இதற்கான தீர்வை கொண்டு வர மத்திய அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது.
Indian Govt considering to allow common medicines in general stores
விரைவில் பொதுவான மருந்துகளை அதாவது மருத்துவரின் பரிந்துரை சீட்டுகள் இல்லாத மருந்துகளை சாதாரண கடைகளிலேயே விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓவர் தி கவுண்டர் மருந்துகள் என்பவை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கிடைக்கக்கூடிய மருந்துகள். உதாரணமாக வலி நிவாரணி ஜெல்கள் மற்றும் சளி மாத்திரைகள் போன்றவை ஓவர் தி கவுண்டர் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன.
இத்தகைய பொதுவான மருந்துகளை சாதாரணமான மளிகை கடைகளில் கூட கிடைக்கச் செய்யும் வகையில் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்காக மத்திய அரசு அமைத்த கமிட்டி சளி, இருமல் மற்றும் ஆன்டசிட் மருந்துகளை சாதாரண கடைகளிலும் கிடைக்கச் செய்வதன் நன்மை தீமைகளை ஆய்வு செய்து வருகிறது. அது மட்டுமின்றி இந்த கமிட்டி இந்தியாவின் ஓவர் தி கவுண்டர் மருந்து கொள்கையை மாற்றி அமைப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில்தான் மருந்துகளை வழங்க வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் இருந்தாலும், ஓவர் தி கவுண்டர் முறையிலும் சில மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் என்னென்ன மருந்துகள் இவ்வாறு அனுமதிக்கப்படுகின்றன என்பதற்கான பட்டியல் தெளிவாக இல்லை. எனவே இதனை வழிமுறைப்படுத்தும் பணிகள் நிபுணர் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குனர் அதுல் கோயல் இந்தியாவின் ஓவர் தி கவுண்டர் மருந்து பாலிசியை நிர்ணயம் செய்வதற்காக ஒரு கமிட்டியை அமைத்துள்ளார். பல்வேறு நிபுணர்கள் கொண்ட இந்த கமிட்டியானது, ஓவர் தி கவுண்டரில் என்னென்ன மருந்துகளை வழங்கலாம், அவற்றின் சாதக பாதகங்கள் என்னென்ன, குறிப்பாக கிராமப்புறங்களில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்து வருகிறது. இந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.
ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பொதுவான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் நாம் சாதாரண மளிகை கடைகளில் கூட வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அங்கெல்லாம் அதற்கு முறையான வழிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
மருந்துகளின் பட்டியல் வழங்கப்பட்டு அவை மட்டுமே விற்கப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் பொதுவாக மக்கள் பயன்படுத்தக்கூடிய மருந்துகளை மருந்து கடைகளுக்கு சென்று வாங்காமல் அருகில் உள்ள சிறிய மளிகை கடைகளை கூட வாங்கிக் கொள்ளும் வகையில் திருத்தங்களை கொண்டு வரலாம் என மத்திய அரசு நினைக்கிறது.
0 Comments