நீட் தேர்வு முறைகேடுகள் புகார்; டாப் மதிப்பெண் பெற்றவர்கள் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள்; தேசிய தேர்வு முகமை விளக்கம்
09 Jul 2024 17:13 IST
author-image
நீட் தேர்வில் பாட்னாவில் உள்ள 12 மையங்களில் இருந்து 175 பேரும், கோத்ராவில் உள்ள 2 மையங்களில் இருந்து 8 பேரும் மட்டுமே 640 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கோத்ரா மையங்களில் இருந்து யாரும் 680 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறவில்லை, மேலும் பாட்னா மையங்களில் இருந்து 35 பேர் மட்டுமே 680 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் டாப் 1000, 5000 மற்றும் 10,000 தரவரிசையில் உள்ள மாணவர்கள் 800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்றும், எனவே வினாத்தாள் கசிவு பெரிய அளவில் இல்லை என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறியதாக TOI செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் தரவு பகுப்பாய்வு பாட்னாவைத் தாண்டி வேறு எங்கும் "பெரிய வினாத்தாள் கசிவை" குறிப்பிடவில்லை. பீகார் காவல்துறையால் வினாத்தாள் கைப்பற்றப்பட்ட தேர்வர், 720க்கு 103 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்று தேசிய தேர்வு முகமை வட்டாரம் தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, டாப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ததாகவும், அதில் முதல் 11,000 தரவரிசைகளின் தரவு பகுப்பாய்வு 800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் பரவலாக மாணவர்களின் விகிதத்தை காட்டுவதாகவும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறினர்.
ஆயிரம் பேர் கொண்ட ஒவ்வொரு குழுவிற்கும் மதிப்பெண் முறைகள் மற்றும் அவற்றின் விநியோகம் ஆகியவற்றை நாங்கள் ஆராய்ந்தோம். உதாரணமாக, முதல் 1,000 மாணவர்கள் 800 மையங்களில் பரவியுள்ளனர். எம்.பி.பி.எஸ் அல்லது பல் மருத்துவ இடங்களைப் பெற அதிக வாய்ப்புள்ள முதல் 1 லட்சம் விண்ணப்பதாரர்கள், மொத்தம் உள்ள 4,750 மையங்களில் 4,500 மையங்களில் பரவியுள்ளனர், எனவே குறிப்பிட்ட மையங்களில் முதலிடம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர் என்பது தவறான குற்றச்சாட்டு என்று அந்த அதிகாரி கூறினார்.
மேலும், டாப் 5,000 மாணவர்கள் போன்ற சிறிய குழுக்களை ஆய்வு செய்துபோது, அவர்களும் 780 மையங்களில் பரவியுள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
மே 5ம் தேதி நீட் தேர்வில் பங்கேற்ற 23 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். பரவலான முறைகேடுகள் மற்றும் வினாத்தாள்களை அணுகுவது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்திருந்தால், பாட்னா மற்றும் கோத்ராவிற்கான தகுதி சராசரி அதிகமாக இருந்திருக்கும். பாட்னா மற்றும் கோத்ராவிற்கான தகுதிச் சராசரி தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது, மேலும் அவற்றின் அண்டை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்களை விட குறைவாக உள்ளது என்று அதிகாரி கூறினார்.
மனுதாரர்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் எழுப்பிய மற்றொரு கவலை, முழுமையான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் ஏழு பேர் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பின்னர், ஆறு விண்ணப்பதாரர்களுக்கு நேர இழப்பு காரணமாக சரியான மதிப்பெண்களை வழங்கிய கருணை மதிப்பெண்கள் பறிக்கப்பட்டு, மறுதேர்வு நடத்தப்பட்டது. ஜூன் 23 அன்று மறுதேர்வு செய்த ஐந்து பேர் 720 க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றனர்.
0 Comments