இந்தியப் பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத உச்சங்களுடன் வர்த்தகம் நீடித்து வருகிறது. சென்செக்ஸ் 85,000 புள்ளிகளைக் கடந்த நிலையில், நிஃப்டி 26,0000-ஐ நோக்கி முன்னேறி வருகிறது.மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.24) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 212.54 புள்ளிகள் சரிந்து 84,716.07 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 52.2 புள்ளிகள் சரிந்து 25,886.85 ஆக இருந்தது.
கடந்த மூன்று வர்த்தக நாட்களாக ஏற்றம் தொடர்ந்த இந்தியப் பங்குச் சந்தையில் இன்று காலை ஆரம்பமே சற்று சறுக்கல் என்றாலும், சில நிமிடங்களிலேயே மீட்சி ஏற்பட்டது. அத்துடன், புதிய வரலாற்று உச்சத்தையும் சென்செக்ஸ் புள்ளிகள் எட்டியது கவனிக்கத்தக்கது.
காலை 10.40 மணியில் சென்செக்ஸ் 91.49 புள்ளிகள் (0.11%) உயர்ந்து 85,020.10 ஆகவும், நிஃப்டி 29.45 புள்ளிகள் (0.11%) உயர்ந்து 25,968.50 ஆகவும் புதிய உச்சங்களுடன் ஏற்றம் கண்டிருந்தது.
காரணம் என்ன? அமெரிக்க ஃபெடரல் வங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி விகிதத்தை சமீபத்தில் குறைத்தது, சர்வதேச அளவிலான பங்கு வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் சாதகமான போக்கு நிலவிய சூழலில், ஆசிய பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் காணப்படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் தொடர்ந்து மிகுதியாகி இருப்பதும் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் ஆகும்.
ஏற்றம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பவர் கிர்ட் கார்ப்பரேஷன் நெஸ்லே இந்தியா ஹெச்டிஎஃப்சி பேங்க் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா எல் அண்ட் டி டாடா மோட்டார்ஸ் பாரதி ஏர்டெல் ஏசியன் பெயின்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஐடிசி எஸ்பிஐ இண்டஸ்இண்ட் பேங்க் விப்ரோ ஐசிஐசிஐ பேங்க் டெக் மஹிந்திரா ஆக்சிஸ் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து ரூ.83.57 ஆக இருந்தது.
0 Comments