சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்களிடையே தங்கம் விலை குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையே தங்கம் விலை உயர என்ன காரணம்.. வரும் காலத்தில் அதன் விலை குறையுமா என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். அது தொடர்பாக நாம் பார்க்கலாம்.கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள தங்கம் விலை, இப்போதைக்கு குறைவது போலத் தெரியவில்லை.
இன்றைய தினம் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ 7100ஐ தொட்டுவிட்டது.அதேபோல ஒரு சவரன் தங்கம் ரூ 56,800க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலையைக் கேட்டாலே தலையைச் சுற்றும் அளவுக்கே அது உயர்ந்து வருகிறது. உயர என்ன காரணம்: நம்ம ஊரில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் தங்கம் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தை இப்போது வாங்கலாமா இல்லை வரும் காலங்களில் அது விலை குறையுமா என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
அதற்கான பதிலை நாம் பார்க்கலாம். முதலில் தங்கம் விலை அதிகரிக்க என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம். நிதி கொள்கை, புவிசார் அரசியல் பதட்டங்கள், சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவை காரணமாகவே இப்போது தங்கம் விலை மளமளவென உயர்கிறது.
இது தொடர்பாக கேசிஎம் வர்த்தகத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் டிம் வாட்டர் கூறுகையில், "அமெரிக்க டாலர் மதிப்பு சற்று உயர்ந்தது. தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியது. ஆனால், அமெரிக்க மத்திய வங்கி அதிகளவில் வட்டி குறைப்பை மேற்கொள்ளும் என்று சந்தை எதிர்பார்ப்பதால் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது" என்கிறார்.
இந்த 2024 தொடங்கியது முதல் தங்கம் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. இந்தாண்டு மட்டும் தங்கம் விலை 29% உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் நிதி கொள்கைகளும் புவிசார் அரசியல் பதற்றங்களுமே இதற்குக் காரணமாகும். சர்வதேச பதற்றம்: இஸ்ரேல் ஹமாஸ் போர், இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல், ரஷ்யா உக்ரைன் விகாரம் எனச் சர்வதேச பதற்றங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இதுவும் தங்கம் விலை அதிகரிக்க முக்கியமான காரணமாக இருக்கிறது.புவிசார் பதற்றம், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை இருக்கும் போது மக்கள் நிலையான முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
அப்படிப்பட்ட நிலையான முதலீடாகத் தங்கம் இருப்பதால் இதுபோன்ற சூழல்களில் தங்கம் விலை அதிகரிக்கும். தங்கம் விலை எப்போது குறையும்.. புரியாமல் தவிக்கும் மக்கள்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க புரியும் வல்லுநர்கள் கருத்து: இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "தங்கத்தின் விலையை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் தங்கம் விலை வரும் காலங்களில் அதிகரிக்கவே செய்யும். அமெரிக்காவின் தனிப்பட்ட நுகர்வு செலவுகள் குறியீடு மற்றும் வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரங்கள் எதிர்பார்ப்புகளைக் காட்டிலும் சிறப்பாக இருந்தால் மட்டுமே தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அங்குக் கொஞ்சம் அமைதி திரும்பினாலும் கூட தங்கம் விலை குறையலாம். ஆனால், இப்போது அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அதேநேரம் தங்கம் விலை இப்போது உச்சத்தை தொட்டுவிட்டது. எனவே, முதலீட்டாளர்கள் கொஞ்சம் விற்பார்கள் அப்போது தங்கம் விலை சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது" என்றார். 2 காரணங்கள்: அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தங்கம் விலை உயரவே வாய்ப்பு இருக்கிறது. அதன் விலை குறைவது அமெரிக்காவின் நிதி கொள்கைகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைப் பொறுத்தே இருக்கிறது.
0 Comments