இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் புதிய உச்சங்களுடன் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக, சென்செக்ஸ் 86,000 புள்ளிகளை நெருங்குகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.27) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 119.38 புள்ளிகள் உயர்ந்து 85,955.50 ஆக புதிய உச்சம் கண்டது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 34.5 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 26,250.55 என இருந்தது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் புதிய உச்சத்துடன் சென்செக்ஸ் 86,000-ஐ நெருங்கி வருவதும், தொடர்ந்து பங்குச் சந்தையில் சாதகமான போக்கு நிலவுவதும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தைக் கூட்டியுள்ளது. இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 91.81 புள்ளிகள் (0.11%) உயர்ந்து 85,927.93 ஆகவும், நிஃப்டி 54.30 புள்ளிகள் (0.21%) உயர்ந்து 26,270.35 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன? அமெரிக்க ஃபெடரல் வங்கி சமீபத்தில் வட்டி விகிதத்தை குறைத்தது, சர்வதேச அளவிலான பங்கு வர்த்தகத்தில் பெரும் சாதகமான தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க பங்குச் சந்தையில் உயர்வுடன் வர்த்தம் முடிவடைந்த நிலையில், ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் தொடர்ந்து ஏற்றம் நிலவி வருகிறது. இந்தப் போக்குடன், இன்றைய தினம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டிவரும் ஆர்வத்தால் இந்தியப் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
இன்போசிஸ் விப்ரோ டைட்டன் இண்டஸ்இண்ட் பேங்க் சன் பார்மா ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் டாடா ஸ்டீல் ஏசியன் பெயின்ட்ஸ் மாருதி சுசுகி டாடா மோட்டார்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஹெச்டிஎஃப்சி பேங்க் கோடக் மஹிந்திரா பேங்க் ஐசிஐசிஐ பேங்க் பாரதி ஏர்டெல் எல் அண்ட் டி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்து ரூ.83.64 ஆக இருந்தது.
0 Comments